திண்டுக்கல் அருகே வெள்ளிக்கிழமை இரவு டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து ரூ.1.64 லட்சம் ரொக்கம் மற்றும் ரூ.16 ஆயிரம் மதிப்பிலான மதுபான பாட்டில்களை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
திண்டுக்கல்லை அடுத்த யாகப்பன்பட்டியில் டாஸ்மாக் மதுபானக் கடை செயல்பட்டு வருகிறது. இக்கடையில், நாகல் நகரைச் சேர்ந்த வெங்கடசுப்பிரமணி (50) கண்காணிப்பாளராகவும், பாலகிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த மு.கணேசன் (42), ஏ.வெள்ளோடு பகுதியைச் சேர்ந்த பொ.தொந்தி கணபதிராம் (32) ஆகியோர் விற்பனையாளர்களாகவும் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு வழக்கம்போல் பணி முடிந்து, மதுபானக் கடையை பூட்டிவிட்டு வெங்கடசுப்பிரமணி உள்ளிட்ட மூவரும் சென்றுவிட்டனராம். பின்னர், மதுபானக் கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், அங்கு வைக்கப்பட்டிருந்த ரூ.1.64 லட்சம் ரொக்கம் மற்றும் 4 பெட்டிகளிலிருந்த ரூ.16 ஆயிரம் மதிப்பிலான மதுபான பாட்டில்கள் ஆகியவற்றை திருடிச் சென்றனர்.
இந்நிலையில் சனிக்கிழமை அதிகாலையில், மதுபானக் கடை திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதியினர், கண்காணிப்பாளர் வெங்கடசுப்பிரமணியனுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பின்னர், அவர் மதுபான கடைக்கு வந்து பார்வையிட்டார். பின்னர், பணம் மற்றும் மதுபாட்டில்கள் திருடு போனது குறித்து திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீஸார் வழக்குப்பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.