பழனி தைப்பூச விழாவுக்கு பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்கு விபத்தில் சிக்காமல் தடுக்கும் வகையில் இரவில் ஒளிரும் குச்சிகளை கோயில் நிர்வாகத்தினர் வெள்ளிக்கிழமை இரவு வழங்கினர்.
பழனியில் தைப்பூசத் திருவிழாவுக்கு திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வருகின்றனர். அவர்களுக்கு கோயில் நிர்வாகம் சுகாதாரத்துறை மூலமாக வழிநெடுக மருத்துவ முகாம்கள் அமைத்து பக்தர்களுக்கு கால்வலி, காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு உடனடியாக சிகிச்சை அளித்து வருகின்றனர்.
மேலும், ஒட்டன்சத்திரம் முதல் பழனி வரையிலும் போக்குவரத்து அதிகமாக இருப்பதால் பக்தர்கள் இரவு நேரங்களில் பாதுகாப்பான நடைப்பயணம் மேற்கொள்ள ஒளிரும் குச்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. வெள்ளிக்கிழமை இரவு பக்தர்களுக்கு ஆயிரக்கணக்கான ஒளிரும் குச்சிகளை கோயில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர்(பொறுப்பு) செந்தில்குமார் உள்ளிட்டோர் வழங்கினர். இக்குச்சிகள் பழனி நகரின் எல்லையில் பக்தர்களிடம் திரும்ப பெறப்பட்டு சுழற்சி முறையில் வழங்கப்படுகிறது. மேலும், சண்முகநதி, இடும்பன் கோயிலில் நீராடும் நிலைகளில் பக்தர்கள் பாதுகாப்பு கருதி தற்காலிக குளிக்கும் இடங்கள் அமைக்கப்பட்டு ஷவர் மூலம் தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது. நகரில் பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.