பழனியில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற அன்னதான மையங்களில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
பழனியில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி, பழனி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏராளமான இடங்களில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்நிலையில், பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாட்டைத் தடுக்கும் வகையில், உணவுப் பாதுகாப்பு மற்றும் நியமன அலுவலர் நடராஜன் தலைமையில், ராமமூர்த்தி, ஜாபர் உள்பட 12 வட்டார உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் 4 குழுக்களாகப் பிரிந்து ஆய்வு மேற்கொண்டனர்.
இதில், பழனி கோயில் சார்பில் நடைபெறும் அன்னதானக்கூடம் முதல் தனியார் சார்பிலான அன்னதானம் மற்றும் வழியெங்கும் வழங்கப்பட்ட அன்னதானம் என அனைத்து இடங்களிலும் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின்போது, சுமார் 15 கிலோ பிளாஸ்டிக் குவளைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இது குறித்து நியமன அலுவலர் நடராஜன் தெரிவித்தது: பழனியில் பிளாஸ்டிக் பயன்பாடு வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது.
அன்னதானத்தின் போது கூட நிறமிகள் சேர்க்கக்கூடாது, பழைய எண்ணெயை உணவுக்கு பயன்படுத்தக் கூடாது என அன்னதானம் வழங்குவோர்க்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. பழனியில் விழாக் காலம் முடியும் வரை ஆய்வு நடைபெறும். மேலும், பழனி, ஆயக்குடி, நத்தம், கோபால்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கொய்யா, மா, வாழை போன்றவற்றை ரசாயனம் மூலம் பழுக்க வைக்கக் கூடாது எனவும் அறிவுறுத்தியுள்ளோம். அனுமதிக்கப்பட்டுள்ள ரசாயனம் மூலம் பழங்களை பழுக்க வைக்கலாம் என்றும், அதற்காக தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் மூலம் விவசாயிகளுக்கு சிறப்பு கூட்டங்களும் நடத்த உள்ளோம்.
உணவே மருந்தாகப் பயன்படுத்தும் நிலைக்கு மக்களை மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார்.