ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொள்ளும் கிறிஸ்தவர்கள் அரசு நிதி உதவியைப் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) சி.முத்துமாரி விடுத்துள்ள செய்திக்குறிப்பு: ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கிறிஸ்தவர்களில் ஜெருசலேம் புனித பயணம் செல்பவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் ரூ.20 ஆயிரம் நிதி உதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் புனிதப் பயணம் மேற்கொள்ள விரும்புவோர் விண்ணப்பிக்கலாம். பயணமானது பெத்லஹேம், ஜெருசலேம், நாசரேத், ஜோர்டான் நதி, கலிலேயா சமுத்திரம் மற்றும் கிறிஸ்தவ மத தொடர்புடைய புனித தலங்களை உள்ளடக்கியதாகும். பயணமானது நடப்பு டிசம்பர் முதல் வரும் ஜனவரி 2019 வரையிலான பத்து நாள்கள் இருக்கும் வகையில் உத்தேசிக்கப்பட்டுள்ளது. பயணம் செல்ல விரும்புவோர் விண்ணப்பப் படிவங்களை ராநாதபுரம் மாவட்ட ஆட்சியர்அலுவலக வளாகத்தில் செயல்படும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் கட்டணமின்றி பெறலாம். அரசு இணையத்திலும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை தேவையான ஆவணங்களை இணைத்து ஜெருசலேம் புனிதப் பயணத்துக்கான விண்ணப்பம் என உறையில் குறிப்பிட்டு மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம், கலச மஹால், பாரம்பரியக்கட்டடம், சேப்பாக்கம், சென்னை-5 என்ற முகவரிக்கு அனுப்பவேண்டும் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.