பரமக்குடி பகுதி வைகை ஆற்றில் உள்ள ஆக்கிரமிப்புகள் மற்றும் கழிவுநீர் கலப்பது குறித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அமைத்த வழக்குரைஞர்கள் குழுவினர் சனிக்கிழமை ஆய்வு செய்தனர்.
வைகை ஆறு தொடங்கும் தேனி மாவட்டத்திலிருந்து, முடிவடையும் ராமநாதபுரம் மாவட்டம் வரை உள்ள ஆக்கிரமிப்புகள் மற்றும் கழிவுகள் கலப்பதை தடுக்க வேண்டும் என வழக்குரைஞர் அருண்நிதி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், இப்புகார் தொடர்பாக வைகை ஆற்றை ஆய்வு செய்ய மூத்த வழக்குரைஞர் வீரகதிரவன் தலைமையில் குழு அமைத்து உத்தரவிட்டது. இந்நிலையில், வழக்குரைஞர்கள் குழுவினர் அருண்நிதி ஜெகநாதன், சுஜய்கிருஷ்ணா, ராஜ்குமார் ஆகியோர் பரமக்குடி பகுதியில் காட்டுப்பரமக்குடி முத்தையா கோயிலிலிருந்து காக்காத்தோப்பு வரையிலும் உள்ள ஆக்கிரமிப்புகள் மற்றும் கழிவுநீர் வைகை ஆற்றில் கலக்கும் இடங்கள், ஆற்றில் தேங்கியுள்ள கழிவுநீர் குட்டைகள் ஆகியவற்றை சனிக்கிழமை பார்வையிட்டனர். ஆய்வின்போது வட்டாட்சியர் என்.பரமசிவம், நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) எஸ்.வரதராஜன், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் சீனிவாசன் ஆகியோர் உடன் சென்றனர்.