தனியார் நிதி நிறுவனத்தில் நகைகளை அடகு வைக்காமலேயே போலி ஆவணங்கள் மூலம் ரூ.24.74 லட்சம் எடுத்ததாக நிறுவன முன்னாள் கிளை மேலாளர் உள்ளிட்ட 5 பேர் மீது ராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
சாயல்குடியில் பிரபல தனியார் நிதி நிறுவனம் உள்ளது. இதில் நகைகள் அடகு வைத்து பணம் பெறும் வசதி உண்டு. இந்தநிலையில், வாடிக்கையாளர்கள் பெயரில் நகைகள் அடகு வைக்கப்பட்டதாக ஆவணங்கள் இருந்தன.
ஆனால், 2018 ஆம் ஆண்டுக்கான தணிக்கையின் போது ஆவணங்களில் குறிப்பிட்டபடி நகைகள் ஏதுமில்லை. அதனடிப்படையில் நிறுவனத்திலிருந்து ரூ.24.74 லட்சம் பணம் எடுக்கப்பட்டிருந்தது.
நிறுவனத்தின் சார்பில் நடந்த விசாரணையில் அங்கு கிளை மேலாளராகப் பணியாற்றியவர் உள்ளிட்ட 5 பேர் வாடிக்கையாளர்கள் பெயரில் நகைகளை அடகு வைக்காமலேயே அடகு வைத்தது போல போலி ஆவணங்களைத் தயாரித்து பணத்தை எடுத்திருப்பது தெரியவந்தது.
பணம் எடுத்தவர்களிடம் அதைத் திருப்பித் தருமாறு நிறுவனம் சார்பில் கோரப்பட்டது. அதற்கு அங்கு பணிபுரிந்த கமல்ராஜ் (30) உள்ளிட்டோர் சம்மதம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், கூறியபடி குறிப்பிட்ட நாள்களுக்குள் கமல்ராஜ் உள்ளிட்டோர் பணத்தை திருப்பிச் செலுத்தவில்லை.
இதையடுத்து நிறுவன மண்டல மேலாளர் ஆர்.சுரேஷ்குமார் ராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் கமல்ராஜிடம் விசாரணை நடந்தது.
அதன்படி தற்போது நிறுவன முன்னாள் மேலாளர் கமல்ராஜ், பணியாளர்கள் சாயல்குடி ராஜேஸ்வரன், கமுதி கண்ணார்பட்டி சரவணகுமார், சாயல்குடி அரவிந்த்ராஜ், ராஜேஸ்வரி
உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.