திருவாடானை அருகே நம்புதாளையில் உள்ள தபால் அலுவலகத்தில் பூட்டை உடைத்து ரூ.40ஆயிரம் பணம், செல்லிடப்பேசியை மர்மநபர்கள் புதன்கிழமை இரவு திருடிச் சென்றனர்.
திருவாடானை தாலுகா தொண்டி அருகே நம்புதாளையில் கிராமப்புற தபால் நிலையம் உள்ளது. இதை புதன்கிழமை இரவு பூட்டிவிட்டு சென்றனர். மறுநாள் வியாழக்கிழமை காலையில் வழக்கம் போல் தபால் நிலையத்தைத் திறக்க வந்த தலைமை தபால் அதிகாரி புலவேந்திரன் கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டார். இது குறித்து புலவேந்திரன் தொண்டி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார்.
தகவலின் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற தொண்டி போலீஸார் அங்கு நடத்திய சோதனையில், அலுவலகத்தில் இருந்து ரூ.40ஆயிரம் பணம், ரூ.10ஆயிரம் மதிப்புள்ள செல்லிடப்பேசி ஆகியவற்றை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இது குறித்து தொண்டி போலீஸார் வழக்குப் பதிந்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.