திருவாடானை அருகே உள்ள ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் விவசாயப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இங்குள்ள சனவேலி, பாரனூர், ஏ.ஆர்.மங்கலம், கொன்னக்குடி, கீழ்பனையூர், மேல்பனையூர், கற்காத்தகுடி, தும்பாடகோட்டை, சோழந்தூர், வண்டல், வரவணி, செங்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிக அளவில் நெல் விவசாயம் செய்யப்படுகிறது.
இந்நிலையில் இப்பகுதிகளில் தற்போது சம்பா பட்டத்தில் சுமார் 12 ஆயிரம் ஹெக்டேரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக பருவமழை பொய்த்துப் போய்விட்டதால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தனர்.
இதனிடையே இந்த ஆண்டுக்குரிய விவசாய காலம் தொடங்கியதையடுத்து, இப்பகுதிகளில் பெய்த குறைந்த அளவு மழையை பயன்படுத்தி அனைத்து விவசாயிகளும் நேரடி நெல் விதைப்பு செய்து முடித்து விட்டனர். விதைப்பு செய்யப்பட்ட நிலங்களில் நெல் பயிர் முளைத்து வளரத் தொடங்கியுள்ளது.
இதற்கிடையே இந்த ஆண்டாவது பருவ மழை பெய்து
விளைச்சல் அதிகரிக்கும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் களைக்கொல்லி தெளிப்பது உள்ளிட்ட விவசாயப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.