சிலைக் கடத்தலைத் தடுக்கதிருஉத்தரகோசமங்கை கோயிலுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

திருஉத்தரகோசமங்கை மற்றும் திருப்புல்லாணி கோயில்களில் சிலைக் கடத்தலை தடுக்க இரவு நேரங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு


திருஉத்தரகோசமங்கை மற்றும் திருப்புல்லாணி கோயில்களில் சிலைக் கடத்தலை தடுக்க இரவு நேரங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி.என்.காமினி தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:
திருஉத்தரகோசமங்கை மங்களநாதசுவாமி கோயிலில் பச்சை மரகத நடராஜர் சிலையை கடந்த நவ. 3 ஆம் தேதி இரவு மர்மநபர்கள் சிலர் திருட முயற்சித்த போது அபாய மணி ஒலித்ததால் தப்பி ஓடி விட்டனர்.
மேலும் கோயில் காவலாளி ஆர்.செல்லமுத்துவும் அந்த மர்ம நபர்களால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சிலையை திருட முயன்றவர்களை பிடிக்க கீழக்கரை டி.எஸ்.பி.முருகேசன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இத்தனிப்படை இதற்கு முன்பு கோயில் சிலைகள் திருடப்பட்ட இடங்களில், அதில் தொடர்புடைய நபர்களை ஒப்பிட்டுப் பார்த்து அதன் மூலம் முக்கிய தடயங்கள் கிடைக்கிறதா என ஆய்வு செய்து வருகின்றனர்.
இச்சம்பவத்தை தொடர்ந்து திருஉத்தரகோசமங்கை மங்களநாதசுவாமி கோயில் மற்றும் திருப்புல்லாணி ஆதிஜெகன்னாதப் பெருமாள் கோயில் ஆகியவற்றில் இரவு நேரங்களில் மட்டும் துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் இரவு 8 மணியிலிருந்து மறுநாள் காலை 8 மணி வரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.
காவல் சார்பு ஆய்வாளர்களாக பணியாற்றி பதவி உயர்வு பெற்ற 14 பெண் காவல் ஆய்வாளர்கள் ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் பல்வேறு
காவல் நிலையங்களில் விரைவில் பணியமர்த்தப்படவுள்ளனர் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com