ராமநாதபுரத்தில் நடந்த இரட்டைக்கொலை சம்பவத்தில் புதுக்கோட்டை நீதிமன்றத்தில் சரணடைந்த இளைஞரிடம் இருநாள்கள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அனுமதியளித்தது.
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகப் பகுதியில் கடந்த அக்.16 ஆம் தேதி கார்த்திக், விக்கி (எ) விக்னேசுவரன் ஆகிய இருவரும் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். முன்விரோதம் காரணமாக நடந்த இச்சம்பவம் தொடர்பாக கேணிக்கரை போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.
இந்த வழக்கில் போலீஸாரால் தேடப்பட்டு வந்தவர்களில் ஒருவரான, வாலாந்தரவையைச் சேர்ந்த மனோகரன் மகன் தவம் (எ) அறிவழகன் (26), கடந்த மாதம் 31 ஆம் தேதி புதுக்கோட்டை 2ஆவது குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
அவரை கேணிக்கரை போலீஸார் ராமநாதபுரம் 2ஆவது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஆர்.ராதாகிருஷ்ணன் முன் செவ்வாய்க்கிழமை ஆஜர்படுத்தினர். அப்போது, அறிவழகனை இருநாள்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி வழங்குமாறு மனுச் செய்தனர். இம்மனுவை விசாரித்த நீதிபதி, அறிவழகனை நவ. 13 மற்றும் 14 ஆம் தேதி மாலை 5 மணி வரை விசாரிக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.