கமுதி அருகே உள்ள கோவிலாங்குளம் அரசுப் பள்ளி, ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் தெருக்களில் சுற்றித்திரியும் பன்றிகளால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
கமுதி- சாயல்குடி செல்லும் வழியில் உள்ள கோவிலாங்குளத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி, ஆரம்ப சுகாதார நிலையம், காவல் நிலையம், கால்நடை மருத்துவமனை மற்றும் 300-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்நிலையில் அரசு மேல்நிலைப்பள்ளி, ஆரம்ப சுகாதார நிலைய பகுதிகளில் அதிக அளவில் பன்றிகள் சுற்றித் திரிகின்றன.
இவற்றால் சுகாதாரக்கேடு ஏற்படுவதுடன், தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் மாணவர்கள், நோயாளிகள் பாதிக்கப்படுவர் எனவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு கோவிலாங்குளத்தில் சுகாதாரக்கேட்டை ஏற்படுத்தும் பன்றிகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.