பரமக்குடி நகராட்சியில் தீயணைப்பு நிலையம், தெற்கு பள்ளிவாசல், காமராஜர் நகர் பகுதிகளில் பழுதடைந்த தெரு விளக்குகளை சீரமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பரமக்குடி நகராட்சிக்கு உள்பட்ட 36 வார்டுகளில் கிழக்குப் பகுதிகளான திருவரங்கம் சாலை, தெற்கு பள்ளிவாசல், காமராஜர் நகர் ஆகிய பகுதிகளில் தெரு விளக்குகள் நீண்ட நாள்களாக எரியாமல் உள்ளன.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் நகராட்சி அலுவலகத்தில் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால் இரவு நேரங்களில் தெருக்களில் நடந்து செல்லும் பெண்களுக்கு சமூக விரோதிகளால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
மேலும், மர்ம நபர்கள் இருள் பகுதியில் செல்லிடப்பேசி, பணம் உள்ளிட்ட வழிப்பறி செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
எனவே, பொதுமக்களின் பாதுகாப்பு கருதி மேற்கண்ட பகுதிகளில் பழுதடைந்துள்ள மின்விளக்குகளை சீரமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.