ராமநாதபுரம் அருகே உள்ள ஆர்.காவனூர் கண்மாய்க்குள் புள்ளி மான் சடலம் புதன்கிழமை மீட்கப்பட்டது.
இக்கண்மாக்கு தண்ணீர் அருந்த வந்த மான் சேற்றில் சிக்கி இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது. மானின் சடலத்தை வனத்துறையினர் மீட்டு பரிசோதனை செய்த பின் புதைத்தனர்.
இது குறித்து வனச்சரகர் சதீஷ் கூறியது: இறந்து கிடந்த மானுக்கு 5 வயது இருக்கும். 48 கிலோ எடை இருந்தது. ஆர்.காவனூர் கண்மாய்க்கு தண்ணீர் குடிக்க வந்தபோது சேறு இருப்பது தெரியாமல் குதித்ததால், அதில் சிக்கி காலை எடுக்க முடியாமல் மயக்கம் அடைந்து உயிரிழந்திருக்கலாம். மான் உடம்பில் காட்டுக்கருவேல மரத்தின் முள்கள் குத்திய அடையாளம் உள்ளது. வனத்துறையினர் அந்தப்பகுதியில் ரோந்துப்பணி செய்து கொண்டிருந்த போது இதை தற்செயலாக பார்க்க நேரிட்டது. ஆண் இனத்தைச் சேர்ந்த இந்தமானை ஆர்.காவனூர் கால்நடை மருத்துவர் சாரதா பிரேதப் பரிசோதனை செய்தார். மானின் கொம்புகள் அகற்றப்பட்டு வனத்துறை அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. மானின் சடலத்தை அடக்கம் செய்து விட்டோம் என்றார்.