திருவாடானையில் புதிதாக கட்டப்பட்ட மகளிர் காவல் நிலைய கட்டடத்தில் காரைகள் பெயர்ந்து விழுவதால் போலீஸார் அச்சத்துடன் பணியாற்றுகின்றனர்.
திருவாடானையில் ரூ.41 லட்சம் செலவில் கட்டப்பட்ட அனைத்து மகளிர் காவல் நிலைய கட்டடத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த ஜூன் 21 ஆம்தேதி காணொளி மூலம் திறந்து வைத்தார். இந்த கட்டடம் திறக்கப்பட்டு சில மாதங்கள் ஆன நிலையில் சுவற்றில் சிமென்ட் காரைகள் பெயர்ந்து உதிர்ந்துவிட்டன. மேலும் ஜன்னல் மேல் போடப்பட்டுள்ள சிலாப்புகளும் பெயர்ந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் இங்கு பணியாற்றும் போலீஸார் அச்சத்துடன் உள்ளனர்.
மேலும் இந்த கட்டடத்தின் உள்ளே குளியல் அறை, கழிப்பறைகளில் குழாய் வசதி செய்து தரப்படவில்லை. எனவே கட்டடத்தை சீரமைப்பது குறித்து, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.