ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் புதன்கிழமை 4 மணி நேரத்திற்கும் மேலாக காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது.
பரமக்குடி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் பருவமழை போதிய அளவு பெய்யாமல் விவசாயிகள் மற்றும் பொது மக்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகி வந்தனர். இந்நிலையில், புதன்கிழமை மாலையில் காற்றுடன் கூடிய பலத்த மழை கொட்டியது. இதனால் நகரில் பல்வேறு தெருக்கள் மற்றும் சாலைகளில் இருசக்கர வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு மழைநீர் வெள்ளம்போல் தேங்கியது.
தற்போது வைகை ஆற்றில் பாசனநீர் ராமநாதபுரம் பெரிய கண்மாய்க்கு செல்லும் நிலையில் இந்த மழை மாவட்ட மக்களுக்கும், விவசாயிகளுக்கும் பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. மாவட்டத்தில் பரவலாக பெய்த மழையைத் தொடர்ந்து விவசாயிகள் விவசாயப்பணிகளை மேற்கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.
காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பகுதியில் புதன்கிழமை மாலையில் மேகமூட்டம் ஏற்பட்டு மாலை 6.15 மணியளவில் தொடங்கி சுமார் 20 நிமிடங்கள் மித மான மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. நகரில் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவிவருகிறது. காரைக்குடி சுற்று வட்டாரங்களிலும் மிதமான மழை பெய்ததால் வெப்பம் தணிந்தது.