திருவாடானையில் உள்ள மாரியம்மன் கோயிலில் புதன்கிழமை முளைப்பாரி மற்றும் பூக்குழி திருவிழா நடைபெற்றது.
திருவாடானை தெற்குத்தெரு,வடக்குத் தெருவில் உள்ள மாரியம்மன் கோயில்களுக்கு கடந்த 11 ஆம் தேதி காப்புக்கட்டுதலுடன் விழா தொடங்கியது.
ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. வடக்கு தெரு மாரியம்மன் கோயில் திருவிழாவில் புதன்கிழமை மழை வேண்டி முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக வந்தனர். அதனைத் தொடர்ந்து பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.
அதே போல் தெற்குத்தெரு முத்து மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பால், பறவை, மயில் காவடிகளை எடுத்து நான்கு வீதிகள் வழியாக வலம் வந்து பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
பின்னர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாலை தீர்த்தவாரியுடன் விழா நிறைவு பெற்றது.