ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவு தினத்தன்று விதிமுறைகளை மீறி வந்த 27 வாகனங்கள் மீது, போலீஸார் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
பரமக்குடியில் செப்டம்பர் 11-ஆம் தேதி இமானுவேல் சேகரன் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. அதில், அவரது நினைவிடத்துக்கு அஞ்சலி செலுத்த வருவோர் சொந்த வாகனங்களில் உரிய அனுமதி பெற்று, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாத வகையில் வந்து செல்லவேண்டும் என, மாவட்ட ஆட்சியர் கொ. வீரராகவ ராவ் உத்தரவிட்டிருந்தார்.
அதன்பேரில், இதை கண்காணிக்கும் பணியில் மதுரை-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுந்தனேந்தல் காவல் சோதனைச் சாவடியில் தலைமைக் காவலர்கள் பாப்பாத்தி மற்றும் மாதவன் ஆகியோர் ஈடுபட்டு வந்தனர். அதையடுத்து, பரமக்குடி நகர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலர் பாப்பாத்தி அளித்த புகாரின் பேரில், விதிமுறைகளை மீறி வந்த மதுரை, சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களைச் சேர்ந்த 12 வாகனங்கள் மீதும், தலைமைக் காவலர் மாதவன் அளித்த புகாரின்பேரில் 15 வாகனங்கள் மீதும் என மொத்தம் 27 வாகனங்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.