ராமேசுவரம் அருகேயுள்ள மாங்காடு கிராமத்தில் இறால் பண்ணை கழிவுநீரை திறந்தவெளியில் விடுவதைக் கண்டித்து கிராம பொதுமக்கள் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மாங்காடு கிராமத்தில் 200 -க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதி பொதுமக்களின் குடிநீர் ஆதாரமாக உள்ளது. நிலத்தடி நீர் கிணறுகளில் நல்ல தண்ணீர் கிடைப்பதால் அந்த தண்ணீரை குடிக்க பயன்படுத்தி வருகின்றனர். இப்பகுதியில் உரிய அனுமதிபெறாமல் நடைபெறும் இறால் பண்ணைகளை அகற்றக்கோரி கடந்த 6 மாதங்களாக தொடர் போராட்டங்களை கிராம பொதுமக்கள் மேற்கொண்டு வருகின்றனர். போராட்டத்தின்போது மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கும் என உறுதிமொழி அளித்தும் வருவாய்த்துறை அதிகாரிகள் அதன்படி நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில்,சனிக்கிழமை காலையில் இறால் பண்ணை கழிவுகளை இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான 17 ஏக்கர் நிலப்பகுதியில் திறந்து விட்டுள்ளனர். இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நிலத்தடி நீர் உப்பு தன்மை ஏற்பட்டு குடிநீர் குடிக்க பயனற்ற நிலை ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது. இதனை கண்டித்து 100 க்கும் கிராம பொதுமக்கள் கழிவு நீர் தேங்கிய இடத்தில் அமர்ந்து சனிக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். உரிய நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் அனைத்து கிராம பொதுமக்களை திரட்டி பெரிய அளவிலான போராட்டம் நடத்த உள்ளதாக அவர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.