ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் சார்-பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் வியாழக்கிழமை நடத்திய சோதனையில் முக்கிய ஆவணங்கள் மற்றும் ரொக்கப் பணம் சிக்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ராமேசுவரத்தில் உள்ள சார்-பதிவாளர் அலுவலகத்தில் கடந்த சில மாதங்களாக பத்திர பதிவிற்கு அதிகாரிகள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகவும், போலி பத்திரம் பதிவு செய்யப்படுவதாகவும் ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புகார்கள் வந்தன.
இதையடுத்து, ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. உன்னி கிருஷ்ணன், ராமநாதபுரம், சிவகங்கை,விருதுநகர் மாவட்ட ஆய்வுக்குழுத் துணை ஆட்சியர் ஷேக் முகைதீன், லஞ்ச ஒழிப்புத் துறை ஆய்வாளர்கள் பீட்டர், வானதி உள்ளிட்ட அதிகாரிகள் தலைமையில் 10 பேர் கொண்ட குழுவினர் வியாழக்கிழமை மாலை ராமேசுவரம் சார் -பதிவாளர் அலுவலகத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அலுவலகத்தில் பணியில் இருந்த சார் -பதிவாளர் (பொறுப்பு) திருமலை மற்றும் ஊழியர்களிடம் நடத்திய சோதனையில் ரொக்கப் பணம் மற்றும் ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும் இந்த சோதனையைத் தொடர்ந்து நள்ளிரவு வரை விசாரணை நடைபெற்றது என டி.எஸ்.பி. உன்னி கிருஷ்ணன் தெரிவித்தார்.