ராமநாதபுரத்தில் சாரண, சாரணிய மாணவர்களுக்கு திருத்திய சோபன் 3 நாள் பயிற்சி முகாம் ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது.
ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள ராமநாதபுரம் மற்றும் மண்டபம் கல்வி மாவட்டங்கள் சார்பில், பள்ளி சாரண, சாரணிய மாணவர்களுக்கு 3 நாள் திருத்திய சோபன் பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. முகாமானது, கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது.
இதில், ராமநாதபுரம் மற்றும் மண்டபம் கல்வி மாவட்டங்களைச் சேர்ந்த அரசு, அரசு உதவிபெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளில் இருந்து 226-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர்.
ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெற்ற இம்முகாமில், சாரண, சாரணியர் இயக்கத்தின் மாநிலப் பயிற்றுநர்கள் ஜெரோம் எமிலியா, பரமேஸ்வரன் மற்றும் ஜெபமாலை ஆகியோர், முதலுதவி, வனக்கலை, குறியீடுகள், திசை அறிதல் உள்ளிட்ட பல்வேறு வகையான பயிற்சிகளை அளித்தனர்.
ராமநாதபுரம் நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிறைவு நாள் நிகழ்ச்சியில், ராமநாதபுரம் கல்வி மாவட்ட சாரண, சாரணிய இயக்கத் தலைவர் டாக்டர் அரவிந்தராஜ் கலை நிகழ்ச்சிகளை தொடக்கி வைத்தார். சாரண, சாரணியர் நடனம், நாடகம், பாடல் மற்றும் யோகா போன்ற கலை நிகழ்ச்சிகளை நடத்தினர். மாவட்ட சாரண, சாரணிய செயலாளர் செல்வராஜ் ஆண்டு அறிக்கை வாசித்தார். முன்னதாக, மண்டபம் மாவட்ட சாரண, சாரணிய செயலர் மகாலெட்சுமி வரவேற்றார். மண்டபம் கல்வி மாவட்ட சாரண, சாரணிய துணை செயலர் ஜெரோம் நன்றி கூறினார்.