ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் காஷ்மீரில் உயிர்நீத்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி

காஷ்மீரில் தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை

காஷ்மீரில் தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் திங்கள்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.
ராமநாதபுரம் அரண்மனை பகுதியில், ராமநாதபுரம் பொற்கொல்லர் சங்கம் சார்பில் 
நடந்த நிகழ்ச்சிக்கு, சங்கத் தலைவர் பி.எம். நாகராஜன் தலைமை வகித்தார். செயலர் டி. கோபி, துணைத் தலைவர்கள் எம். நாகராஜன், முன்னாள் தலைவர் எம்.ராமநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 
பின்னர், உயிரிழந்த ராணுவ வீரர்களின் புகைப்படங்கள் முன்பாக மெழுகுவர்த்தி ஏற்றியும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தி, ராணுவ வீரர்களுக்கு வீரவணக்கம் என கோஷமிட்டனர்.
அதேபோல், எல்.ஐ.சி. சார்பில் நடந்த நிகழ்ச்சியில், சங்க நிர்வாகி மனோகரன் தலைமை வகித்தார். முன்னாள் ராணுவ வீரர் கோபால் மற்றும் தர்மர், முத்துபாண்டி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். உயிரிழந்த ராணுவ வீரர்களின் படத்துக்கு மெழுகுவர்த்தி ஏற்றியும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர்.  
சிவகங்கை: கீழக்கண்டனியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளி மாணவ, மாணவியர், காஷ்மீர் தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்த 40 ராணுவ வீரர்களுக்கு மலரஞ்சலி மற்றும் வீர வணக்கம் செலுத்தினர். தொடர்ந்து, பள்ளி வளாகத்துக்குள் வைக்கப்பட்டிருந்த 40 வீரர்களின் உருவப் படத்துக்கு மெழுகுவர்த்தி ஏற்றியும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினர். இதில், பள்ளித் தலைமை ஆசிரியர் சு. செல்வராஜ், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் தற்போது ராணுவ வீரராகப் பணியாற்றி வரும் சிவகங்கையைச் சேர்ந்த கே. நம்பிராஜன் உள்பட ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவியர் மற்றும்  பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர். 
திருவாடானை: காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் ஆத்மா சாந்தி அடைய,  நம்புதாளை ஊராட்சி ஒன்றியத் துவக்கப் பள்ளியில் மாணவ, மாணவியர் மெழுகுவர்த்தி ஏற்றியும், மலர் தூவியும் திங்கள்கிழமை அஞ்சலி செலுத்தினர். இதில், பள்ளித் தலைமை ஆசிரியர் தாமஸ் மற்றும் ஆசிரியர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
கமுதி: பேரையூர் முன்னாள் ஊராட்சி துணைத் தலைவர் ரூபி தலைமையில், பேரையூர், பீட்டர்புரம், அய்யனார்புரம், சாமிபட்டி, செங்கோட்டைபட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த மகளிர் சுயஉதவிக் குழுவினர், பேரையூர் கண்மாய் கரையிலிருந்து பஜார், போஸ்ட் ஆபீஸ் தெரு, பீட்டர்புரம், அய்யனார்புரம் வழியாக மெழுகுவர்த்தி ஏந்தி, மீண்டும் ஊராட்சி அலுவலகம் வரை ஊர்வலமாக வந்தனர். 
பின்னர்,  காஷ்மீரில் தீவிரவாதிகளின் குண்டுவெடிப்பில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தினர். இதில், தீவிரவாதத்தை ஒழிக்கும் வகையில் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
நிகழ்ச்சியில், மகளிர் சுயஉதவிக் குழுக்களைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com