பரமக்குடியிலிருந்து சோமநாதபுரத்துக்கு புதன்கிழமை சிற்றுந்தில் சென்ற பெண்ணிடம் 3 பவுன் நகையை திருடிய 2 பேரை பயணிகள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
பரமக்குடி அருகே உள்ள பொதுவக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்து மனைவி முனியம்மாள் (50). இவர் உறவினரின் விசேஷ நிகழ்ச்சிக்கு செல்வதற்காக பரமக்குடியில் உள்ள நகைக்கடையில் 3 பவுன் நகை வாங்கி, அதனை தனது கைப்பையில் வைத்துக்கொண்டு சோமநாதபுரம் செல்லும் சிற்றுந்தில் ஏறிச் சென்றுள்ளார். அவரை பின்தொடர்ந்து வந்த ஏனாதி கிராமத்தைச் சேர்ந்த பழனி மகன் மகாலிங்கம் (23), காளிதாஸ் மகன் மணிகண்டன் (20) ஆகிய இருவரும் அதே பேருந்தில் ஏறி வந்துள்ளனர். பேருந்து ஐந்துமுனை சந்திப்பில் வந்து கொண்டிருந்தபோது, முனியம்மாளின் பையிலிருந்த 3 பவுன் நகையை இருவரும் அவருக்கு தெரியாமல் திருடியுள்ளனர்.இதையடுத்து முனியம்மாள் தனது கைப்பையை பார்த்தபோது நகை திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. உடனே அவர் கூச்சலிடவே அருகில் நின்ற மகாலிங்கம், மணிகண்டன் இருவரையும் பொதுமக்கள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர். அவர்களிடம் சோதனை நடத்தியதில் 3 பவுன் நகையை அவர்கள் திருடியிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து பரமக்குடி நகர் காவல் நிலையத்தில் முனியம்மாள் அளித்தப் புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்தனர்.