ராமநாதபுரம் நகராட்சியில் ரூ.10 கோடியில் 30 சாலைகள் சீரமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கஜா புயலைத் தொடர்ந்து ராமநாதபுரத்தில் சாலை சீரமைக்கும் பணிக்கு அரசு ரூ.10 கோடி ஒதுக்கியுள்ளது. கடந்த 2018 அக்டோபரில் சாலை சீரமைப்பு பணியைத் தொடங்கும் வகையில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. ஆறு மாதங்களில் பணிகள் முடிக்கப்படும் எனக் கூறப்பட்டது. ஆனால், பணிகளை கடந்த பிப்ரவரி 4 ஆம் தேதி தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் எம்.மணிகண்டன்
தொடக்கி வைத்தார். பணிகள் தொடங்கிய பின்னரும் சாலை சீரமைப்பு தாமதமாகவே நடந்துவருவதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து நகராட்சி பொறியாளர் பிரிவில் கேட்டபோது, சாலை சீரமைப்பு நிதி அளிக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
தற்போது சிவன்கோவில், சன்னதி தெரு, மூலக்கொத்தளம், கோட்டைமேடு ஆகிய இடங்களில் பணிகள் நடந்து வருகின்றன.
வரும் மார்ச் மாதத்துக்குள் சாலை சீரமைப்புப் பணிகள் முடிக்கப்பட வேண்டும். தாமதித்தால் விதிமுறைப்படி சாலை ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.