மதுரை-ராமேசுவரம் சாலையில் ராமநாதபுரம் அச்சுந்தன்வயல் முதல் பட்டணம்காத்தான் வரையிலான நான்கு வழிச்சாலைக்கு சனிக்கிழமை பூமி பூஜை நடைபெற்றது.
மத்திய சாலை நிதி திட்டத்தின் கீழ் ரூ.35 கோடி மதிப்பில் அச்சுந்தன் யல் முதல் பட்டணம்காத்தான் வரையில் மொத்தம் 8.30 கிலோ மீட்டர் தொலைவுக்கு நான்கு வழிச்சாலை அமைக்கப்பட உள்ளது.
இதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி ராமநாதபுரம் நகர், அரசு போக்குவரத்துக் கழக பணிமனை அருகே நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் தலைமை வகித்தார். தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் எம்.மணிகண்டன் பணிகளைத் தொடக்கி வைத்தார்.
பின்னர் அவர் கூறியதாவது: ராமநாதபுரம் நகரில் இரு வழித்தடமாக உள்ள இந்தச் சாலை நான்கு வழிச் சாலையாக அகலப்படுத்தி மேம்படுத்தப்படவுள்ளது. அதற்காகவே மத்திய சாலை நிதி திட்டத்தில் ரூ.38.25 கோடி நிதிக்கான தொழில்நுட்ப அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சாலையானது மையத் தடுப்புடன் 15.61 மீட்டர் அகலத்திற்கு அமைக்கப்படவுள்ளது. இதில் 13 சிறு மற்றும் குறு பாலங்களும், 12 இடங்களில் பேருந்து நிறுத்த பகுதிகளும் 2.45 கி.மீ. தொலைவுக்கு மழைநீர் வடிகாலும் அமைக்கப்பட்டு இச்சாலை மார்ச் மாத இறுதிக்குள் தயாராகிவிடும் என்றார்.
பூஜையில், தேசிய நெடுஞ்சாலைத்துறை
கோட்டப் பொறியாளர் த.தனசேகர், நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் ஜி.முருகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.