ராமநாதபுரத்தில் குடியிருப்புகளுக்கு மத்தியில் குப்பை கொட்டும் இடம் அமைக்க எதிர்ப்புத் தெரிவித்த பொதுமக்கள், அதற்காக கட்டப்பட்ட கட்டடத்தை திங்கள்கிழமை இடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ராமநாதபுரம் நகராட்சியில் 6 ஆவது வார்டுக்கு உள்பட்ட பகுதியில் பாத்திமா நகர் உள்ளது. இங்கு அல்லிக்கண்மாய் தெரு உள்ளிட்ட 500-க்கு மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில், நகராட்சி சார்பில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தில் மக்கும், மக்காத குப்பைகளைத் தரம் பிரிக்கும் வகையிலான கட்டடப் பணி கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது.
பொதுமக்கள் நெருக்கமாக வசிக்கும் இப்பகுதியில் குப்பை கொட்டும் இடம் அமைக்க எதிர்ப்புக் கிளம்பியது. மேலும், இது குறித்து மாவட்ட ஆட்சியர், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் எம்.மணிகண்டன் ஆகியோரிடமும் மனு அளிக்கப்பட்டது. இந்தநிலையில், திங்கள்கிழமை நகராட்சி சார்பில் குப்பை தரம் பிரிப்பு கட்டடப் பணிகள் நடைபெற்றதை அறிந்த அப்பகுதி ஆண்களும், பெண்களும் திரண்டு வந்து நகராட்சி சார்பில் கட்டடப் பணி நடப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். மேலும், சில பெண்கள் கட்டப்பட்ட கட்டடத்தை இடித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
தகவலறிந்து வந்த போலீஸார், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் நகராட்சி சார்பில் குப்பை கொட்டுமிடத்துக்கான பணிகள் நிறுத்தப்பட்டன. இதனால் அப்பகுதியினர் கலைந்து சென்றனர்.
இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் கூறுகையில், மக்கள் நெருக்கமாக வசிக்கும் இப்பகுதியில் ஏற்கெனவே சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டு தொற்றுநோய் பரவி வருகிறது.
இந்நிலையில், குப்பை தரம் பிரிக்கும் இடமாக மாற்றப்படுவதால் எதிர்காலத்தில் வசிக்கவே முடியாத சூழல் ஏற்படும். ஆகவே, ஊருக்கு ஒதுக்குப்புறமாக குப்பை தரம் பிரிக்கும் இடத்தை நகராட்சி நிர்வாகம் தேர்வு செய்யவேண்டும் என்றனர்.