ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலுக்குச் சொந்தமான சீதா தீர்த்தத்தில் கழிவு நீர் கலப்பதால் மாசு ஏற்படுவதாக பக்தர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலிலுக்கு சொந்தமான ராமர் தீர்த்தம், லட்சுமண தீர்த்தம், சீதா தீர்த்தம் ஆகியன பேருந்து நிலையத்தில் இருந்து கோயிலுக்கு செல்லும் வழியில் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ளன. இதில் ராமர் மற்றும் லட்சுமண தீர்த்தம் முறையாக பராமரிக்கப்பட்டு பக்தர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக சீதா தீர்த்தக் குளத்தை கோயில் நிர்வாகம் முறையாகப் பராமரிக்கவில்லை.
எனவே அப்பகுதியில் உள்ள தனியார் விடுதிகள் தங்களுடைய கழிவு நீரை அக்குளத்துக்குள் விடுகின்றனர்.
இதனால் சீதா தீர்த்தக் குளத்தில் கழிவு நீர் தேங்கி, பிளாஸ்டிக் பொருள்கள் குவிந்து காணப்படுகிறது. இதனால் மாசு ஏற்படுவதுடன், பக்தர்கள் தீர்த்தமாட முடியாத நிலை உள்ளது என வேதனை தெரிவித்துள்ளனர். எனவே இக்குளத்தை தூர்வாரி, உரிய முறையில் தூய்மையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.