அமைப்பு சாரா தொழிலாளர்கள் நலவாரியங்களுக்கான உறுப்பினர் சேர்க்கை முகாம் கடலாடி கன்னிராஜபுரத்தில் வரும் 24 ஆம் தேதி (வியாழக்கிழமை) நடைபெறுகிறது.
இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலரான, சார்பு நீதிபதி வி.ராமலிங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
ராமநாதபுரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் தொழிலாளர் உதவி ஆணையர் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) ஆகியவை சார்பில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான உறுப்பினர் சேர்க்கை முகாம் கடலாடி தாலுகா கன்னிராஜபுரத்தில் வரும் 24 ஆம் தேதி (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.
அங்குள்ள சமுதாயக் கூடத்தில் நடைபெறும் இம்முகாமில், தமிழ்நாடு கட்டுமானம், உடலுழைப்பு மற்றும் தமிழ்நாடு ஓட்டுநர் தொழிலாளர் நல வாரியங்களில் உறுப்பினர் சேர்க்கை நடத்தப்படவுள்ளது. இதுவரை பதிவு பெறாத தொழிலாளர்கள் அனைவரும் முகாமில் பங்கேற்று பதிவு செய்துகொள்ளலாம்.
இதில் கொத்தனார், சித்தாள், தச்சர், பெயிண்டர், கல் உடைப்பவர், எலக்ட்ரீசியன், ஆட்டோ ஓட்டுநர், சுமை தூக்குபவர், தையல் தொழிலாளர் ஆகிய அமைப்பு சாரா தொழிலில் ஈடுபட்டிருப்போர் பங்கேற்கலாம்.
அவர்கள் இ.எஸ்.ஐ., பி.எப். ஆகிய திட்டங்களில் சேர்ந்திருத்தல் கூடாது.
உறுப்பினர் சேர்க்கை இலவசமாகவே பதியப்படுகிறது. முகாமில் பங்கேற்போர், அசல் குடும்ப அட்டை, அதன் நகல், மார்பளவு புகைப்படம்- 3, ஓட்டுநராக இருப்பின் ஓட்டுநர் உரிமம் அசல், நகல், ஆதார் அட்டையின் அசல், நகல், தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கணக்கு புத்தகம், வாக்காளர் அடையாள அட்டை அசல், நகல் ஆகியவற்றுடன் வரவேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.