சாயல்குடி மலட்டாறு வி.வி.எஸ்.எம். மெட்ரிக்குலேஷன் பள்ளி மாணவர்கள் தனித்திறன் போட்டிகளில் பரிசு பெற்றதை அடுத்து, அவர்களுக்கு திங்கள்கிழமை பாராட்டு விழா நடத்தப்பட்டது.
மதுரை மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகள், தமிழ்நாடு விளையாட்டு ஆணையம் சார்பில், மதுரை ரேஸ்கோர்ஸ் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதில், நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளிகளின் மாணவ, மாணவியர் கலந்துகொண்டனர்.
இதில், சாயல்குடி மலட்டாறு வி.வி.எஸ்.எம். மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவி ஷாலினி குண்டு எறிதலில் முதல் பரிசும், மாணவர் கவின்கரன் உயரம் தாண்டுதலில் இரண்டாம் பரிசும், மாணவி வித்தியா 100 மீட்டர் ஓட்டத்தில் 4 ஆம் பரிசும், உஸ்பான் ஐந்தாம் பரிசும் பெற்றனர்.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, தமிழ்நாடு விளையாட்டு ஆணையம் சார்பில் தலா ரூ. 6 ஆயிரம் வழங்கப்பட்டது. இம் மாணவர்களுக்கு பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவுக்கு, பள்ளியின் தாளாளர் சந்திரா சத்தியமூர்த்தி தலைமை வகித்தார். பள்ளியின் முதல்வர் அங்காளஈஸ்வரி முன்னிலை வகித்தார். முன்னதாக, உடற்கல்வி ஆசிரியர் நாகூர்கனி வரவேற்றார். பள்ளியின் தாளாளரும், முன்னாள் அமைச்சருமான வி. சத்தியமூர்த்தி பரிசு பெற்ற மாணவர்களையும், உடற்கல்வி ஆசிரியர்களையும் பாராட்டி பரிசுகள் வழங்கினார். பள்ளி உடற்கல்வி ஆசிரியர் சிவமுகேஷ் நன்றி கூறினார்.