ராமநாதபுரம் அருகே செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற வாகனச் சோதனையில் ரூ.3 லட்சம் வரை கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ராமநாதபுரம் அருகே வாலாந்தரவையில் வழுதூர் விலக்கு சாலையில் தேர்தல் பறக்கும் படையினர் செவ்வாய்க்கிழமை இரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நெல்லையிலிருந்து வந்த காரை சோதனையிட்டபோது அதில் வந்த தங்கப்பாண்டியிடம் ரூ.1.54 லட்சம் இருப்பது தெரியவந்தது. கட்டுமானப் பணிக்கு கொண்டு செல்வதாக தங்கப்பாண்டி கூறிய நிலையில், அதற்கான ஆவணம் காட்டப்படாததால் பணம் கைப்பற்றப்பட்டது.
அதேபோல, திருப்பூர் அவினாசி பகுதியைச் சேர்ந்த அனஸ் என்பவர் பரமக்குடியிலிருந்து ராமேசுவரம் நோக்கி வாகனத்தில் செவ்வாய்க்கிழமை இரவு சென்ற நிலையில், அவரிடமிருந்து ரூ.1.46 லட்சம் கைப்பற்றப்பட்டது. கார் வாங்கி விற்கும் தொழில் செய்வதாக கூறிய அனஸ் அதற்கான ஆவணங்களை காட்டவில்லை எனக் கூறி தேர்தல் பறக்கும் படையினர் பணத்தை கைப்பற்றியுள்ளனர்.