திருப்பாச்சேத்தி, தொண்டியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வியாழக்கிழமை நடத்திய வாகனச் சோதனையில் உரிய ஆவணங்களின்றி காரில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 2.31 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சோதனை சாவடியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி மீனாட்சிசுந்தரம் தலைமையில் அலுவலர்கள் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது நாகப்பட்டினம் நோக்கிச் சென்ற கேரளாவை சேர்ந்த சுந்தர்ராஜ் (46) என்பவரது காரை வழிமறித்து சோதனையிட்ட போது, அவரிடம் ரூ. 53 ஆயிரம் இருந்தது தெரியவந்தது. அந்த பணத்துக்கு உரிய ஆவணங்கள் அவரிடம் இல்லாததால் அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதேபோல் அதிராம்பட்டினத்திலிருந்து பரமக்குடி நோக்கி சென்ற நிஜாம் மைதீன் (34) என்பவரது காரை வழிமறித்து சோதனையிட்ட போது அவரும் உரிய ஆவணங்களின்றி ரூ. 91ஆயிரத்தை எடுத்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து அந்த பணத்தையும் தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மானாமதுரை:
சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகே தேர்தல் பறக்கும் படை அலுவலர் செந்திவேல், காவல் சார்பு ஆய்வாளர் சோமசுந்தரபாரதி ஆகியோர் அந்த வழியாகச் சென்ற வாகனங்களை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது ராமேசுவரத்திலிருந்து மதுரை நோக்கி சென்ற காரை நிறுத்தி சோதனை செய்தபோது காரில் வந்தவர் உரிய ஆவணமின்றி ரூ. 87 ஆயிரத்தை எடுத்துச் சென்றது தெரிந்தது. இதையடுத்து இந்த பணத்தை கைப்பற்றிய அதிகாரிகள் மானாமதுரை சார்நிலைக் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.