சிவகங்கை-ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றங்களில் தொடரப்பட்ட கூட்டுறவு சங்க தேர்தல் தொடர்பான வழக்குகளை ஓய்வுபெற்ற நீதிபதி ராமநாதன் தலைமையிலான குழுவினர் சிவகங்கையில் செவ்வாய்க்கிழமை விசாரித்தனர்.
தமிழகம் முழுவதும் நடைபெற்ற கூட்டுறவு சங்க தேர்தல் தொடர்பாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை ஓய்வுபெற்ற நீதிபதியைக் கொண்டு விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதையடுத்து, கூட்டுறவு சங்க தேர்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்க தெற்கு மண்டலக் குழு தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி ராமநாதனும், மதுரை, விருதுநகர், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட கூட்டுறவு இணைப் பதிவாளர்கள் உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட்டனர்.
இக்குழுவினர் விசாரணைக்கு செல்லும் பகுதிகளில் அந்தந்த மாவட்ட ஆட்சியர் மற்றும் இணைப் பதிவாளர்கள் உறுப்பினர்களாக கலந்து கொண்டு விசாரணை மேற்கொள்வர். கூட்டுறவு சங்க தேர்தல் தொடர்பாக சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் சுமார் 40 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளை விசாரிப்பதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி ராமநாதன் தலைமையிலான குழுவினர் சிவகங்கைக்கு செவ்வாய்க்கிழமை வந்தனர்.
வழக்கு விசாரணையின்போது சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சிவஞானம், ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி ஆகியோர் உடனிருந்தனர்.
இதில் சிவகங்கை மாவட்ட நீதிமன்றத்தில் தொடரப்பட்ட 8 வழக்குகளும், ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் தொடரப்பட்ட 6 வழக்குகளும் விசாரணை செய்யப்பட்டது.