ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் ஆகிய மூன்று மாநில தேர்தல்களில் பெரும்பான்மை இடங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, மானாமதுரையில் அக்கட்சித் தொண்டர்கள் செவ்வாய்க்கிழமை பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.
மானாமதுரையில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகம் முன், கட்சியின் தலைவர் ராகுல்காந்தியை வாழ்த்தி முழக்கமிட்டனர். அதைத்தொடர்ந்து நடைபெற்ற பாரதியார் பிறந்த நாள் விழாவில், அவரது உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் நகர்த் தலைவர் கணேசன், தாழ்த்தப்பட்டோர் பிரிவு மாவட்ட நிர்வாகி ரமேஷ்கண்ணா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
முதுகுளத்தூர்: ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பேருந்து நிலையத்தில் சட்டப்பேரவை முதுகுளத்தூர் தொகுதி உறுப்பினர் மலேசியா எஸ்.பாண்டியன் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாவட்ட தலைவர் எம்.பூவலிங்கம், கிழக்கு
வட்டார தலைவர் ராமர், மேற்கு வட்டார தலைவர் புவனேஸ்வரன், நகர் தலைவர் என்.சுரேஸ்காந்தி மற்றும் முதுகுளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதி மேம்பாட்டு நலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.