சிவகங்கை மாவட்டத்தில் 2017-2018 ஆம் ஆண்டிற்கான தூய்மை பள்ளிகளுக்கான புரஸ்கார் விருதுகள் 48 பள்ளிகளுக்கு வழங்கப்பட்டன.
டெங்கு மற்றும் பன்றிக் காய்ச்சலை தடுக்கவும் சுகாதாரமான கழிவறைகள், சோப்புடன் கூடிய கைகழுவும் வசதி, நடத்தை மற்றும் திறன் உயர்த்துதல் ஆகியன குறித்தும் சிறப்பாக விழிப்புணர்வு ஏற்படுத்திய வகையில் மாவட்ட அளவில் 48 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டன. இப்பள்ளிகளுக்கு புரஸ்கார் விருதுகள் வழங்கும் விழா ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. விழாவில் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன் தலைமை வகித்து, 8 பள்ளிகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் பரிசு, சான்றிதழ், 40 பள்ளிகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அ.பாலுமுத்து, சிவகங்கை மாவட்ட கல்வி அலுவலர் ராஜேந்திரன், ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ச.ரதிமாலா மற்றும் அரசு அலுவலர்கள், ஆசிரிய,ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் பலரும் கலந்து கொண்டனர்.