சட்டப் பணிகள் தினத்தையொட்டி சிவகங்கை மாவட்ட சட்டப் பணிகள் ஆணையம் சார்பில் மாவட்டம் முழுவதும் சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வாகன பிரசார தொடக்க விழா புதன்கிமை நடைபெற்றது.
சிவகங்கையில் உள்ள மாவட்ட நீதிமன்றம் முன் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிவகங்கை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைய தலைவரும், மாவட்ட நீதிபதியுமான மு.ஏ.செந்தூர்பாண்டியன் தலைமை வகித்து, பிரசார வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த வாகனம் வரும் நவ.18 வரை சிவகங்கை மாவட்டம் முழுவதும் பயணம் செய்து, சட்டப் பணிகளின் விவரங்கள் குறித்தும், இலவச சட்ட உதவி பெறுவதற்குரிய பயனாளிகளின் உரிமைகள், தகுதிகள் குறித்தும் விழிப்புணர்வினை ஏற்படுத்த உள்ளது. மேலும், அதுகுறித்த துண்டுப்பிரசுரங்களும் விநியோகிக்கப்பட உள்ளன.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட கூடுதல் நீதிபதி தனியரசு, மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிபதி ராதிகா, சார்பு நீதிபதிகள் சசிரேகா, வடிவேலு, செல்வகுமார், மாவட்ட உரிமையியல் நீதிபதி அச்சுதன், நீதித்துறை நடுவர் லலிதாராணி, சிவகங்கை வழக்குரைஞர் சங்கத் தலைவர் ராஜசேகரன், நிர்வாக உதவியாளர் மணிமேகலை, சட்ட தன்னார்வலர் நாகேந்திரன் உள்ளிட்ட வழக்குரைஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.