சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே காரையூரில் உள்ள அழகிய மணவாளப் பெருமாள் கோயிலில் 11-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுகள் கண்டறியப்பட்டன.
மிகவும் பழமையான இக்கோயிலில் காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரி வரலாற்றுத் துறை பேராசிரியர் வேலாயுதராஜா, கல்வெட்டு ஆய்வாளர் ராஜேந்திரன் ஆகியோர் களஆய்வு மேற்கொண்டனர். அப்போது, கோயில் முன்மண்டபத் தூணில் கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்டன.
இது குறித்து ஆய்வாளர்கள் கூறியது: கல்வெட்டில் இடம்பெற்றுள்ள "திருமகள் புணரா' என்று தொடங்கும் மெய்கீர்த்தி பராக்கிரம பாண்டியனுக்கு உரியது. இதுபோன்ற கல்வெட்டு விக்கிரமங்கலத்திலும் காணப்படுகிறது.
பராக்கிரம பாண்டியனும், முதலாம் குலோத்துங்கச் சோழனும் சமகாலத்தவர்கள். பராக்கிரம பாண்டியன் கேரள சிங்க வளநாடு, காரையூர் கோயிலுக்கு மணற்குடியில் தானமாகக் கொடுத்த நிலத்தின் எல்லைகள் இக்கல்வெட்டில் உள்ளன. மேலும், இக்கோயில் கருவறையில் தெற்குப்புற குமுதத்திலும், ஜகதியிலும் முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனின் 1216 - 38 காலத்திய கல்வெட்டுகளும் உள்ளன என்றனர்.