காரீப் பருவத்தில் வாழை பயிரிட்டுள்ள சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் தங்களது பயிருக்கு காப்பீடு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சிவகங்கை மாவட்ட தோட்டக்கலைத் துணை இயக்குநர் ஜே.ராஜேந்திரன் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சிவகங்கை மாவட்டத்தில் ஆண்டுதோறும் சராசரியாக வாழைப்பயிர் 880 ஹெக்டர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கடும் வறட்சி, நோய் தாக்குதலால் பயிர் பாதிக்கப்பட்டு விளைச்சல் குறையும் போது, ஏற்படும் இழப்பினை ஈடுகட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயிர் காப்பீடு செய்யப்பட்டு வருகிறது.
அந்த வகையில், இந்தாண்டு காரீப் பருவத்தில் பயிரிடப்பட்டுள்ள வாழைப்பயிருக்கு சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் விண்ணப்பிக்கலாம். இதன்படி பயிரிட்டுள்ள வாழைப் பயிருக்கு ஒரு ஏக்கருக்கு காப்பீடாக மத்திய, மாநில அரசுகளின் மானியம் போக ரூ.771 செலுத்த வேண்டும். பயிர் காப்பீடு செய்ய விரும்பும் விவசாயிகள் தாங்கள் கணக்கு வைத்துள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி அல்லது தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளின் மூலமாக காப்பீட்டுத் தொகையை செலுத்தலாம்.
அவ்வாறு செலுத்தும் போது வாழை சாகுபடி செய்ததற்கான ஆதாரத்தையும் (அடங்கல் நகல்) சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.