கடந்த 2017-18 ஆம் ஆண்டு பாரத பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பதிவு செய்த விவசாயிகளுக்கு நிவாரணத் தொகை வழங்குவதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக நாட்டுச்சேரி களத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கச் செயலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக சிவகங்கை மாவட்ட கூட்டுறவுத் துறை இணைப் பதிவாளர் ஆரோக்கிய சுகுமார் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: சிவகங்கை மாவட்டம் நாட்டுச்சேரி களத்தூரில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பயிர்க் காப்பீடு நிவாரணத் தொகை வழங்குவதில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக அப்பகுதி விவசாயிகளிடமிருந்து புகார்கள் வந்தன.
இதையடுத்து விசாரணை செய்ததில் அச்சங்கத்தின் செயலர் ஆர்.எம்.வேலு என்பவரின் அறிவுறுத்தலின் பேரில் பயிர்க்காப்பீடு செய்த விவசாயிகளுக்கு உரிய நிவாரணத் தொகை வழங்கப்படவில்லை என்பதும், சில விவசாயிகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட கூடுதலாக அவர்களது வங்கிக் கணக்கில் வரவு வைத்திருப்பதும், வறட்சியால் பாதிக்கப்படாத சிலருக்கு நிவாரணத் தொகை வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியரின் பரிந்துரையின் பேரில் துறை ரீதியாக நடவடிக்கை எடுத்து நாட்டுச்சேரி களத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் செயலர் வேலுவை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.