தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சார்பில் தொழில் பழகுநர் சேர்க்கை முகாம் பிப்ரவரி 25 ஆம் தேதி (திங்கள்கிழமை) நடைபெற உள்ளது.
இதுதொடர்பாக சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு நல அலுவலர் ஆர்.மணிகணேஷ் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சார்பில் தொழில் பழகுநர் சேர்க்கை முகாம் பிப்ரவரி 25 ஆம் தேதி மதுரை கோ.புதூரில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெற உள்ளது. இம்முகாமில் பாரதமிகு மின் நிறுவனம், இந்திய விமான நிறுவனம் போன்ற மத்திய அரசின் நிறுவனங்கள், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் போன்ற மாநில அரசின் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான தொழிற் பிரிவுகளில் தகுதியான தொழிற் பழகுநர்களை தேர்ந்தெடுக்க உள்ளனர்.
இவை தவிர மதுரை, திண்டுக்கல், தேனி,சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களிலுள்ள 80-க்கும் மேற்பட்ட தனியார் தொழில் நிறுவனங்களும் கலந்து கொள்ள உள்ளன.
இதில் ஐடிஐ பயின்ற மாணவ, மாணவிகள், எட்டாம் வகுப்பு முதல் பிளஸ் 2 மற்றும் அதற்கு மேல் கல்வித் தகுதியுடையவர்களும் கலந்து கொள்ளலாம். தேர்வு செய்யப்படும் பயிற்சியாளர்களுக்கு மாதாந்திர உதவித் தொகையாக குறைந்த பட்சம் ரூ.8 ஆயிரம் முதல் ரூ.16 ஆயிரத்து 500 வரை வழங்கப்படும். எனவே தொழில் பழகுநராக சேர விருப்பமுள்ள சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தோர் தங்களது அனைத்துக் கல்வி சான்றிதழ்கள் அசல் மற்றும் நகலுடன் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம். இதுகுறித்த கூடுதல் விவரங்களுக்கு சிவகங்கையில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரடியாகச் சென்று தெரிந்து கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.