காரைக்குடியில் நிகழ்ந்த சாலை விபத்தில் காயமடைந்து மூளைச் சாவு அடைந்த தினமணி முன்னாள் முகவரின் மகன் எம். ராமசாமியின் (63) உடல் உறுப்புகள் மதுரை வேலம்மாள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது.
காரைக்குடி செக்காலை தியாகராஜன் செட்டியார் தெருவைச் சேர்ந்த தினமணியின் முன்னாள் முகவரான மெய்யப்பச் செட்டியாரின் மகன் எம். ராமசாமி (63). இவர் ஈரோட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றியவர். ராமசாமி கடந்த மார்ச் 17-ஆம் தேதி காரைக்குடி முடியரசன் சாலையில் ஏற்பட்ட விபத்தில் பலத்த காயமடைந்து மதுரை வேலம்மாள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு திங்கள்கிழமை (மார்ச் 19) அவர் மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து ராமசாமியின் மனைவி ரேவதி ஆச்சி, மகள் விசாலாட்சி, மருமகன் அருணாசலம் ஆகியோர் விருப்பத்துடன் ராமசாமியின் இருதயம், கல்லீரல், சிறுநீரகங்கள், கண்கள் ஆகியவை தானமாக மருத்துவமனைக்கு வழங்கப்பட்டன. இதையடுத்து அதற்குரிய சான்றிதழை வேலம்மாள் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் ஆர்.எம். ராஜாமுத்தையா, ராமசாமி குடும்பத்தினருக்கு புதன்கிழமை வழங்கினார்.