சிவகங்கை அருகே தனியார் பள்ளிப் பேருந்தில் சனிக்கிழமை கூட்ட நெரிசலில் 3 மாணவிகள் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கினர்.
சிவகங்கை அருகே உள்ள சோழபுரத்தில் தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கு அருகில் உள்ள ஊர்களிலிருந்து தினசரி மாணவ, மாணவிகளை பேருந்தில் அழைத்துச் செல்வது வழக்கம். அந்த வகையில் சனிக்கிழமை பேருந்தில் வழக்கத்தை விட கூடுதலாக மாணவ, மாணவிகளை ஏற்றிக் கொண்டு வந்துள்ளனர். திருப்பத்தூர் சாலையில் ஒக்கூர் அருகே வந்த போது, கூட்ட நெரிசலில் சிக்கிய மாணவிகள் சிவசங்கரி (13), ஆர்த்தி(11), சுவாதி(13) ஆகிய 3 பேரும் மூச்சு திணறல் ஏற்பட்டு மயக்கமடைந்துள்ளனர். சக மாணவர்கள் கூச்சலிட்டு பேருந்தை நிறுத்தியுள்ளனர். இதையறிந்த ஒக்கூர் கிராம மக்கள் மயக்கமடைந்த மாணவிகளை மீட்டு சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன் உத்தரவின் பேரில் மாவட்ட வருவாய் அலுவலர் லதா, சிவகங்கை கோட்டாட்சியர் செல்வகுமாரி, சிவகங்கை வட்டாட்சியர் கண்ணன் உள்ளிட்ட அலுவலர்கள் மருத்துவமனைக்குச் சென்று மாணவிகளிடம் நடந்த சம்பவம் குறித்த விசாரித்தனர். இந்த சம்பவம் குறித்து வட்டார போக்குவரத்து அலுவலர் கல்யாண்குமார் விசாரணை நடத்தி வருகிறார்.