சிவகாசியில் வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை மீறுவதால், விபத்துகள் அதிகரித்து வருகின்றன.
சிவகாசியில் உள்ள நான்கு ரத வீதி, என்.ஆர்.கே.ஆர். சாலை, புதுரோட்டு தெரு உள்ளிட்ட கடை வீதி பகுதியிலுள்ள கடைகளின் உரிமையாளர்கள், கழிவு நீர் வாய்க்காலை ஆக்கிரமித்து, கடை பொருள்களை பரப்பி வியாபாரம் செய்து வருகின்றனர். இதனால் பாதசாரிகள் நடந்து செல்ல இடமின்றி சாலையில் நடப்பதால், அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன.
சிவகாசியில் நாளுக்கு நாள் வாகனங்கள் அதிகரித்து வருகின்றன. அதற்கேற்ற வகையில் சாலைகள் இங்கில்லை.
அதேநேரம், வாகன ஓட்டிகளில் பெரும்பாலானோர் ஒருவழிப் பாதையில் செல்கின்றனர். இரு சக்கர வாகன ஓட்டிகள் சைகை காண்பிக்காமல் திரும்புகின்றனர். சாலையின் நடுவே உள்ள தடுப்பை தாண்டிச் செல்கின்றனர்.
இதன் காரணமாக, சிவகாசி காவல் கோட்டத்தில் தினசரி சுமார் 2 முதல் 5 விபத்து வழக்குகள் பதிவாகின்றன. இந்த விபத்துகளில் கால், கை இழந்தவர்கள் அதிகம்.
வழக்குப் பதியாத சிறு சிறு விபத்துகள் தினசரி பத்துக்கும் மேற்பட்டவை நடக்கின்றன. இருப்பினும், பொதுமக்கள் போக்குவரத்து விதிகளை மதித்து நடப்பதில்லை.
எனவே, காவல் துறையினர் போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்களுக்கு உடனடியாக அபராதம் விதித்தால் மட்டுமே, இது போன்ற விதிமீறல்கள் குறைந்து விபத்தும் தவிர்க்கப்படும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.