நிர்மலா தேவி மீதான பாலியல் பேர வழக்கு: விசாரணை: டிச.19-க்கு ஒத்திவைப்பு

அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி உதவிப் பேராசிரியை நிர்மலா தேவி உள்பட 3 பேர் மீதான பாலியல் பேர

அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி உதவிப் பேராசிரியை நிர்மலா தேவி உள்பட 3 பேர் மீதான பாலியல் பேர வழக்கு விசாரணை டிசம்பர் 19 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 
அருப்புக்கோட்டையில் தனியார் கல்லூரி மாணவிகளிடம் பாலியல் பேரத்தில் ஈடுபட்டதாக உதவிப் பேராசிரியை நிர்மலா தேவி மற்றும் காமராஜர் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் முருகன், காமராஜர் பல்கலைக்கழக முன்னாள் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் மீது, சிபிசிஐடி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது. இதற்கு இம்மூவரும் மறுப்பு தெரிவித்து, வழக்கு நடைபெற்று வரும்  ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள விருதுநகர் மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ததுடன், தங்களை இந்த வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும் எனவும் கோரியிருந்தனர். 
ஆனால், கடந்த 4 ஆம் தேதி நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது, அமர்வு நீதிபதி ஏ. லியாகத் அலி இவர்களது மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், டிசம்பர் 11 ஆம் தேதி முதல் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும் என்றும் உத்தரவிட்டிருந்தார். அதன்படி, செவ்வாய்க்கிழமை இவர்கள் மூவரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டனர்.  இதனிடையே, இந்த வழக்கை சிபிஐ விசாரிக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மாதர் சங்கம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
  இந்த மனு மீதான விசாரணைக்கு, சிபிசிஐடி தரப்பில் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த குற்றச்சாட்டுகள் உள்ளிட்ட ஆவணங்கள், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒப்படைக்கப்பட்டுவிட்டன. 
இதனால், வழக்கு விசாரணையை நீதிபதி லியாகத் அலி டிசம்பர் 19 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். அதையடுத்து, நிர்மலா தேவி, முருகன் மற்றும் கருப்பசாமி ஆகிய மூவரும் பலத்த பாதுகாப்புடன் மதுரை மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com