விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையிலுள்ள புதிய பேருந்து நிலைய வாருகாலில் ஏற்பட்டுள்ள அடைப்பால் கழிவுநீர் தேங்கி சுகாதாரக்கேடும் நோய்த் தொற்று அபாயமும் ஏற்பட்டுள்ளதால், இதை விரைந்து சீரமைக்க வேண்டும் என பொது மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்த பேருந்து நிலைய வளாகத்தினுள் உள்ள உணவகங்கள், தேநீர் கடைகள் மற்றும் கட்டணக் கழிப்பிடங்கள் ஆகியவற்றிலிருந்து வெளியேறும் கழிவுநீரானது நுழைவாயில் பகுதியில் உள்ள பெரிய கழிவுநீர் ஓடையில் சேர்கிறது.
இந்நிலையில் பேருந்து நிலைய வளாகத்தின் வெளிப்பகுதியில் உள்ள சில தேநீர்க் கடைகளில் பயன்படுத்தப்படும் காகித குவளைகள், பிளாஸ்டிக் குவளைகள் உள்ளிட்ட மக்காத குப்பைகளை சிலர் இதில் கொட்டுவதால் ஓடையில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கழிவுநீர் தேங்கி துர்நாற்றத்துடன் சுகாதாரக் கேட்டையும், நோய் தொற்றையும் ஏற்படுத்தி வருகிறது.
இதன் அடைப்புகளை நீக்கக் கோரி நகராட்சியிடம் பல முறை கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையென அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.
ஆகவே விரைந்து உரிய நடவடிக்கை எடுத்துக் கழிவுநீர் ஓடை அடைப்புகளை நீக்குவதுடன் மீண்டும் அதில் மக்காத குப்பைகளைக் கொட்டாத வண்ணம் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.