விருதுநகர் அருகே உள்ள தாதம்பட்டி செல்லும் சாலையில் உள்ள மயானத்தில், தண்ணீர் வசதி இன்றி பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
விருதுநகர் அருகே உள்ள கூரைக்குண்டு ஊராட்சிக்கு உள்பட்ட பகுதியில் உள்ள மாடர்ன் நகர், ஆயுதப்படை குடியிருப்பு முதலான பகுதிகளில் வசிப்போர் பெரும்பாலானோர் பல்வேறு காவல் நிலையங்களிலும், ஆட்சியர் அலுவலகத்திலும் பணி புரிந்து வருகின்றனர். இப்பகுதியில் வாரம் ஒரு முறையே குடிநீர் விநியோகம் செய்யப்படுவதால், வாகனங்களில் விற்கப்படும் குடிநீரை ரூ. 10-க்கு விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தும் நிலை உள்ளது.
இந்நிலையில் இப்பகுதியில் குடியிருப்போருக்காக தாதம்பட்டி செல்லும் சாலையில் மயானம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் அங்கிருந்த அடிகுழாய் பழுது காரணமாக செயல்படவில்லை. இதனால், தண்ணீர் தேக்கி வைப்பதற்காக கட்டி வைக்கப்பட்ட தொட்டியும் காட்சி பொருளாக உள்ளது. இதன் காரணமாக உயிரிழந்தவர்களை அடக்கம் செய்ய செல்லும் உறவினர்கள் தண்ணீர் இல்லாததால் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதனால், மயானத்தில் பணி புரியும் தொழிலாளர்கள் மூலம் தகவல் தெரிவித்து வாகனங்களில் விற்கப்படும் தண்ணீரை விலைக்கு வாங்கி வரவழைத்து தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர்.
அதில் போதிய அளவு தண்ணீர் கிடைக்காததால் இறுதிச் சடங்குகள் செய்ய முடியாமல் தவிப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
எனவே, மயானத்தில் தண்ணீர் வசதி ஏற்படுத்தி தர கூரைக்குண்டு ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.