விருதுநகரில் சனிக்கிழமை ஐயப்பனுக்கு நடைபெற்ற சிறப்பு பூஜையில் 501 குத்துவிளக்குகளை ஏற்றி பெண்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர்.
விருதுநகரில் சபரி ஐயப்ப பக்தர்கள் சார்பில் ஆண்டு தோறும் ஐயப்பனுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடு நடைபெறுவது வழக்கம்.
அதன் அடிப்படையில் மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு சனிக்கிழமை இரவு தனியார் மண்டபத்தில் ஐயப்பனுக்கு சிறப்பு பூஜை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதில், ஐயப்பனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதை முன்னிட்டு 501 குத்து விளக்குகள் ஏற்றி பெண்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர். மேலும், ஐயப்பன் தொடர்பான பக்தி பாடல்களை பாடினர். இதில் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு ஐயப்பனை தரிசனம் செய்தனர்.