விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை வட்டம் சின்னசெட்டிக்குறிச்சி கிராமத்தில் சாலையோர மின்கம்பம் சாய்ந்து விழும் அபாயத்தில் உள்ளது.
இக்கிராமத்திலிருந்து அருப்புக்கோட்டையை நோக்கிச் செல்லும் சாலையோரம் சுமார் 100 ஏக்கர் பரப்பளவுள்ள நிலங்களில் காய்கறிகள், பயறு வகைகளை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். இந்நிலையில், இப்பகுதியில் அடுத்தடுத்து சாலையோரம் உள்ள 2 மின்கம்பங்கள் 3 மாதங்களுக்கு முன் பெய்த மழை மற்றும் காற்றில் சாய்ந்துவிட்டன. இதில், ஒரு மின்கம்பம் அடுத்த மழைக்கு விழுந்து விடும் அபாயத்தில் உள்ளது. இதனால், விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.
எனவே, இந்த 2 மின் கம்பங்களையும் உடனடியாக சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் மின்வாரியத்திடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. விபத்து ஏற்படும் முன் சாய்ந்து விழும் நிலையில் உள்ள இந்த 2 மின் கம்பங்களையும் சீரமைக்க வேண்டுமென, விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.