சிவகாசியில் திங்கள்கிழமை இரு வேறு இடங்களில் வழிப்பறி செய்த மூவரை போலீஸார் கைது செய்தனர்.
சித்துராஜபுரம் கருமன்கோயிலருகே கவிதாநகரைச் சேர்ந்த கூலித்தொழிலாளி கதிர்வேல்(38) நடந்து சென்ற கொண்டிருந்தார். அப்போது இருவர் வழி மறித்து கத்தியை காட்டி மிரட்டி, அவரிடமிருந்த ரூ .300 -ஐ பறித்துக் கொண்டு தப்ப முயன்றனர். அப்போது, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அந்த நபர்களை பிடித்து கதிர்வேல் போலீஸில் ஒப்படைத்தார். விசாரணையில் அவர்கள் சித்துராஜபுரம் கோபால் நகர் ராமர் மகன் செல்வக்குமார்(23), சரவணன் மகன் சூரியா(21) என தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் சிவகாசி நகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.
இதே போல் சிவகாசி ரிசர்வ்லயனைச் சேர்ந்த சுமைதூக்கும் தொழிலாளி தங்கம்(33). அய்யனார் காலனிப் பகுதியில் நடந்து சென்ற போது , ஒருவர் வழிமறித்து கத்தியைக் காட்டி மிரட்டி, அவரிடமிருந்த ரூ.400-ஐ பறித்துக் கொண்டு தப்ப முயன்றுள்ளார். அப்பகுதியினரின் உதவியோடு, அந்த நபரை பிடித்து தங்கம் போலீஸில் ஒப்படைத்தார்.
விசாரணையில் அந்த நபர் அய்யனார்காலனி மாரிக்கனி(28) என தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் சிவகாசி நகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.