காரியாபட்டி அருகே செவ்வாய்க்கிழமை வயலில் வேலை செய்து கொண்டிருந்த பெண்ணிடம் இரண்டு பவுன் நகையை பறித்து சென்ற மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள விரட்டியானேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் மனைவி முத்துப்பாண்டியம்மாள் (46). இவரது கணவர் இறந்து விட்ட நிலையில், தனது 3 பெண் குழந்தைகளுடன் விவசாய வேலை செய்து வருகிறார். இந்நிலையில், இவர் பணிராம்பூர் அருகே உள்ள வயலில் செவ்வாய்க்கிழமை மாலை நாற்று நடும் பணியில் ஈடுபட்டிருந்தாராம். அப்போது, அங்கு இரு சக்கர வாகனத்தில் வந்த 25 வயது மதிக்கத்தக்க ஒருவர், முத்துப்பாண்டியம்மாவிடம் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளார்.
இதையடுத்து அவர், அந்த நபருக்கு தண்ணீர் கொடுக்க முற்பட்ட போது, மறைத்து வைத்திருந்த கத்தியைக் காட்டி மிரட்டி அவர் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்க நகையை பறித்துக் கொண்டு அந்த நபர் தப்பியோடி விட்டாராம்.
இதுகுறித்து காரியாபட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து மர்ம நபரை தேடிவருகின்றனர்.