விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் உள்ள பாத்திரக் கடையில் வியாழக்கிழமை வருமானவரித் துறையினர் சோதனை நடத்தினர்.
அருப்புக்கோட்டை நகர் முஸ்லிம் நடுத் தெருவில் வசிப்பவர் சாகுல் ஹமீது (45). இவர் 10 ஆண்டுகளுக்கு முன் வெளிநாட்டில் தொழில் செய்து ஈட்டிய வருமானத்தின் மூலம், அருப்புக்கோட்டையில் அண்ணா சிலை பகுதி காய்கறிச் சந்தை அருகே சில ஆண்டுகளுக்கு முன் பாத்திரக் கடை தொடங்கி நடத்தி வருகிறார்.
இவர், கடந்த ஆண்டு அருப்புக்கோட்டை தெற்குத்தெரு பகுதி பழைய பேருந்து நிலையச் சாலையில் வீட்டு உபயோகப் பொருள்கள் விற்பனைக் கடையையும் தொடங்கி நடத்தி வருகிறார்.
குறுகிய காலத்தில் அபரிமிதமான வளர்ச்சி அடைந்துள்ள காரணத்தால், வரி ஏய்ப்பு ஏதும் நடைபெறுகிறதா, வெளிநாட்டிலிருந்து முறையாகப் பணம் கொண்டுவரப்பட்டு முதலீடு செய்யப்பட்டுள்ளதா அல்லது ஏதேனும் முறைகேடுகள் நடைபெற்றுள்ளனவா என வருமானவரித் துறையினருக்கு சந்தேகம் எழுந்ததாகக் கூறப்படுகிறது. இதனடிப்படையில், வியாழக்கிழமை காலை சுமார் 11 மணிக்கு விருதுநகர் மாவட்ட வருமானவரித் துறை துணை ஆணையர் கலைச்செல்வி தலைமையில் 12 பேர் கொண்ட குழுவினர், அருப்புக்கோட்டையில் சாகுல் ஹமீதுக்குச் சொந்தமான 2 கடைகளிலும் இரு குழுவாகப் பிரிந்து திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இரவு 7 மணிக்கும் மேலாக தொடர்ந்த இச்சோதனையில், பொதுமக்கள் வாங்கும் பொருளுக்கு உரிய ரசீதுகள் மற்றும் ஜிஎஸ்டி வரி செலுத்தியதற்கான ரசீதுகள் உள்ளிட்டவற்றை ஆய்வு நடத்தியதாகக் கூறப்படுகிறது.
இது வழக்கமான சோதனைதான் என்றும், தனிப்பட்ட புகார்கள் அடிப்படையில் மேற்கொள்ளப்படுவதல்ல என்றும், வருமானவரித் துறை வட்டாரத்தில் கூறப்பட்டது.