விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பில் தீ விபத்தில் குடிசைகளை இழந்த 3 குடும்பத்தினருக்கு இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் வெள்ளிக்கிழமை நிவாரண உதவி வழங்கப்பட்டது.
வத்திராயிருப்பில் சில நாள்களுக்கு முன், விழா ஒன்றில் பட்டாசு வெடித்தபோது, அருகில் இருந்த குடிசைகளில் தீப்பொறி விழுந்து தீ விபத்து ஏற்பட்டது. இதில், மூன்று குடிசைகள் முற்றிலும் சேதமடைந்தன. இந்நிலையில், தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் வேஷ்டி, சேலைகள், அரிசி மூட்டைகள் உள்ளிட்ட நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன. கட்சியின் முன்னாள் மாவட்டச் செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான தி.ராமசாமி பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, நிவாரணப் பொருள்களை வழங்கினார். அப்போது, கட்சியின் ஒன்றியச் செயலாளர் ஆர்.சரவணன், நகரச் செயலாளர் என்.கோவிந்தன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.